முருகப்பெருமான் கோயில்களில் திருக்கல்யாண விழா கோலாகலம்
வடபழனி, வல்லக்கோட்டை, திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை/காஞ்சி/திருப்போரூர்: வடபழனி, வல்லக்கோட்டை, திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவம் முடிந்ததும் மொய் எழுத பக்தர்கள் அழைக்கப்பட்டனர்.
பக்தர்கள் மொய் எழுதியதும் அதற்கான ரசீது மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இரவு 8 மணிக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வடபழனி முருகன் கோயிலில் மங்களகிரி விமான புறப்பாடு, சொக்கநாதர் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்தி புறப்பாடு, வடபழனி ஆண்டவர் புறப்பாடு, அருணகிரி நாதர் புறப்பாடு ஆகியவை நடக்க உள்ளது. இதேபோல், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோயில், வியாசர்பாடி சர்மா நகர் பாலதண்டாயுதபாணி கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
What's Your Reaction?