உணவு சுற்றுலா: திருவையாறு அசோகா
திருவையாறு பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் கடையில் அசோகாவை வாங்கிச் சாப்பிட சுவையின்பத்தை அளிக்கிறது. நாவில் வைத்ததும் வழுக்கிச் செல்லும் தின்பண்டத்தின் நளினம்தான் அசோகாவைத் தனித்துவமாக்குகிறது.

சரித்திரப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறுதான் அசோகாவின் புகலிடம். ராம ஐயர் என்பவர்தான் அசோகாவுக்குக் காரணகர்த்தா! திருமணப் பந்தியில் அசோகா இல்லை என்பதால், களேபரம் ஆன திருமணக் கதைகள் இருக்கின்றன. திருமண நிகழ்வுகள், பண்டிகைக் காலங்களில் அனைவரின் இல்லங்களிலும் தவறாமல் இடம்பெறும் முக்கிய இன்பண்டம் அசோகா.
எப்படித் தயாரிக்கிறார்கள்? பாசிப்பருப்பு, நெய், கோதுமை ஆகியவை அசோகா அல்வா தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக வைத்து, உருவம் தெரியாமல் கடைந்துகொள்கிறார்கள். வாணலியில் நெய் ஊற்றி, கோதுமை மாவு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள். மாவு வறுபட்டவுடன் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறுகிறார்கள். குறிப்பிட்ட பதத்துக்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து, தொடர்ந்து கிளற அல்வா பதத்துக்கு வந்து நிற்கிறது. நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கிறார்கள். வாசனைக்கு கிராம்பு சேர்க்கப்படுகிறது. குங்குமப் பூ சேர்க்க அல்வாவுக்கு கூடுதல் நிறம் கிடைக்கிறது.
What's Your Reaction?