உணவு சுற்றுலா: ஜாங்கிரி டீ
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

சின்னார் வனப்பகுதிக்குள் இருக்கிறது கண்களைக் கொள்ளை கொள்ளும் தூவானம் அருவி. உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் நடுக்காட்டுக்குள் ஒளிந்திருக்கிறது இந்தப் பேரழகான அருவி. மலைச் சாலையில் பயணிக்கும்போது, இந்த அருவியைத் தூரத்திலிருந்து பார்க்க முடியும் என்றாலும், மிக அருகில் சென்று பார்க்க சில கி.மீ. தூரம் ‘ட்ரெக்கிங்’ செல்ல வேண்டும்.
வனத்துறை சார்பில் இந்த அருவிக்கு ‘ட்ரெக்கிங்’ ஏற்பாடு உண்டு. ‘ட்ரெக்கிங்’ செல்லும் பாதையில் வாய்ப்பிருந்தால் யானைகள், அணில்கள் மட்டுமன்றிப் பல்வேறு பறவை இனங்களைப் பார்க்கலாம். தூவானம் அருவிக்குச் செல்ல ‘ட்ரெக்கிங்’ தொடங்கும் இடத்தில் வனத்துறை அலுவலகம் உண்டு. அதன் அருகிலேயே இருக்கிறது ஒரு மண்ணால் கட்டப்பட்ட கடை. மண்ணால் வடிவமைக்கப்பட்ட அடுப்பு, மரக்கட்டைகளால் இழைக்கப்பட்ட மேசை, நாற்காலிகள் எனக் கிராமத்து உணர்வை அந்த மண் கடை நிச்சயம் தரும். குளிருக்கு இதமாகத் தேநீர், காபி ஆகியவற்றோடு ‘ட்ரெக்கிங்’ செல்பவர்களுக்குத் தின்பண்டங்களை விற்பனை செய்யும் இடமாகவும் அந்த மண் கடை செயல்படுகிறது.
What's Your Reaction?