அறிவுக்குக் கிடைத்த பரிசு - மேரி கியூரி | கல்லறைக் கதைகள் 11
பெண்களுக்கு உரிமையே வழங்கப்படாத ஒரு காலக்கட்டத்தில், கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் மாபெரும் சாதனையை மேரி கியூரி நிகழ்த்தினார்.

உலகின் மிக உயரிய கெளரவமான விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இந்த உயரிய விருதை ஒருமுறை பெறுவதே மிகவும் கடினம். நோபல் பரிசு வரலாற்றிலேயே இந்தப் பரிசை இரண்டுமுறை வென்ற பெருமையைப் பெற்றவர் ஒரு பெண். பெண்களுக்கு உரிமையே வழங்கப்படாத ஒரு காலக்கட்டத்தில், கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் இந்த மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் மேரி கியூரி.
அறிவியல் கனவு: 1867ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் Maria Salomea Skłodowska Curie என்கிற மேரி கியூரி. மரியாவின் தந்தை அறிவியல் ஆசிரியர். அதனாலயே மரியாவுக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
கல்வியில் சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்துப் பெண்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத விஷயம் இது. ஆனால், தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. கல்விக் கட்டணம் செலுத்தவும் குடும்பச் செலவுக்காகவும் அவர் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றினார்.
What's Your Reaction?