பெஞ்சமின் பிராங்க்ளின் | விஞ்ஞானிகள் - 9
காகிதத்தில் கரன்சி நோட்டு அச்சடிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார். நடமாடும் நூல் நிலையத்தை அறிமுகப்படுத்தினார். தபால்துறையில் மாற்றம் செய்தார். அமெரிக்காவின் முதல் ‘தீ விபத்து காப்பீட்டு’ நிறுவனத்தை உருவாக்கினார். உலகப் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைகழகத்தை நிறுவினார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார்.

அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் பெஞ்சமின் பிராங்க்ளின். அறிவியல், அரசியல், வர்த்தகம், எழுத்து எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். தான் கால்பதித்த அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்றவர்.
1706 ஜனவரி 17 அன்று பாஸ்டன் நகரில் பிறந்தார் பிராங்க்ளின். அவருடன் சேர்த்து அவர் பெற்றோருக்கு 17 குழந்தைகள். தந்தை மெழுகுவர்த்தி, சோப்பு தயாரித்து விற்பனை செய்தார். பிராங்க்ளினால் ஓர் ஆண்டுகூடப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் வசதி இல்லை. தந்தைக்கு உதவியாளராக மாறினார். தந்தையிடம் தொழிலைக் கற்றார். படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தானே 4 மொழிகளைக் கற்றார். 7 வயதிலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்தார். அண்ணனின் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அவருக்கு ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
What's Your Reaction?