திரைப் பார்வை: குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

‘கோலிசோடா’ மாதிரியான படங்களில் சிறார்களும் பதின்ம வயதினரும் வயது கூடிய கதாபாத்திரங்களை வேட்டையாடும், பழிவாங்கும், வன்முறையை கையிலெடுக்கும் சித்தரிப்புகள், வியாபாரம் அன்றி வேறில்லை.

Jan 25, 2025 - 21:15
 0  6
திரைப் பார்வை: குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

தமிழ் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் ‘சிறுவர் சினிமா’ என்பதே அரிதான நிகழ்வு என்கிற நிலை கடந்த பத்தாண்டுகளில் மாறியிருக்கிறது எனலாம். ஹலிதா ஷமீம், மதுமிதா, மணிகண்டன் தொடங்கி இன்று தரமான சிறுவர் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறுவர்களை மையமாகக் கொண்ட விளையாட்டுத் திரைப்படங்களும் அவ்வப்போது வரவே செய்கின்றன. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிர்த்திசையில் சிறார் மற்றும் பதின்ம வயதினரைக் கொண்டு ‘கோலிசோடா’ போன்ற மோசமான படங்களும் வரவே செய்கின்றன. ‘கோலிசோடா’ மாதிரியான படங்களில் சிறார்களும் பதின்ம வயதினரும் வயது கூடிய கதாபாத்திரங்களை வேட்டையாடும், பழிவாங்கும், வன்முறையை கையிலெடுக்கும் சித்தரிப்புகள், வியாபாரம் அன்றி வேறில்லை. இதே வியாபார நோக்கத்தை உள்வாங்கிக் கொண்டாலும் வன்முறை, பழிவாங்கல் என்கிற அணுகுமுறையிலிருந்து விலகி முழுவதும் கட்சி அரசியலில் விருப்பம் கொண்ட சிறார்களின் குறும்பு உலகை, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் மூலம் கலகலப்பாகக் காட்ட முயன்றுள்ளார் சங்கர் தயாள். இவர், கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தை இயக்கிவர். தனது இரண்டாவது படம் வெளியாகும் முன்பே சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இனி படம் பற்றிய மதிப்பீட்டுக்கு வருவோம்..

ஆதிமூலமும் (யோகிபாபு), சாணக்கியர் (சுப்பு பஞ்சு) ஆகிய இருவரும் ஒரு கட்சியில் சமநிலையிலிருந்து அதிகாரத்துக்காகப் போட்டி போடும் ஊழல் அரசியல்வாதிகள். இவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவரான பக்கிரிசாமி (செந்தில்), இருவருடைய அக்கப்போர்களையும் கண்டுகொள்ளாமல் ’பேலன்ஸ்’ செய்து கட்சியை நடத்துகிறார். ஆதிமூலத்துக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்குப் பிறந்தவன் பல்லவன் (இமயவர்மன்), இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகன் அலெக்சாண்டர் (அத்வைத்). இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். பல்லவன், தாமொரு முழுநேர அரசியல்வாதியின் மகன் என்பதைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதற்காக, சக மாணவ, மாணவிகளைப் பல வழிகளிலும் தன்பக்கம் குழு சேர்த்துக்கொண்டு, ‘லீடர்’ என அழைக்க வைக்கிறான். அண்ணனின் அரசியல் ஆட்டம் பள்ளியிலேயே தொடங்கிவிட்டதை அறியும் தம்பி அலெக்சாண்டர், அவனது அரசியல் ஆசையை ஆதரிப்பதுபோல், பள்ளிப் பேரவையின் மாணவர் சங்கத் தேர்தலில் தொடங்கி பல்லவனின் திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகிறான். இந்தச் சிறுவர்களின் அரசியல் ஆட்டம் வளர்ந்து அவர்கள் பெரியவர்கள் ஆனதும் என்ன நிலைகளை அடைகிறார்கள் என்பது கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow