சிங்கங்கள் ஏன் கர்ஜிக்கின்றன? | உயிரினங்களின் மொழி - 25
ஆண் சிங்கத்தின் மேனி பெரிய உடல் வலிமையைக் குறிக்கிறது. இது ஆரோக்கியத்தையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட உடல் அமைப்பு பெண் சிங்கங்களைக் கவர்ந்திழுக்கிறது. எதிரிகளையும் பயமுறுத்துகிறது.சிங்கங்கள் குழுவாக வேட்டையாடும்போது கண் சமிஞ்ஞைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன. ஒரு சிங்கம் இரையைப் பார்க்கும் போது குழுவில் உள்ள மற்ற சிங்கங்களும் அதே திசையைப் பார்க்கும். இது வேட்டையின் முதல் படி. இந்தத் தருணத்தில் அவை மென்மையான குரலில் முணுமுணுப்பதுகூட இல்லை. தாய் சிங்கம் குட்டிகளுடன் தொடர்புகொள்ள, மென்மையான முனகல் ஒலியை எழுப்பும்.

சிங்கங்கள் ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள கர்ஜனை, உடல் அசைவு, வாசனை, தொடுதல் போன்ற வழிகளைக் கையாளுகின்றன. சிங்கத்தின் தொண்டையில் உள்ள குரல் நாண்கள் சதுர வடிவத்தில் இருக்கும். இந்த வடிவம் குரல் நாண்களை உறுதியாக வைத்து, அதன் வழியே காற்று நுழையும்போது பலமான ஒலியை உருவாக்குகிறது. இதனால் சிங்கங்கள் அதிக முயற்சி இல்லாமலே பலமான கர்ஜனையை எழுப்ப முடியும். ஒரு சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒலியின் அளவு ஏறக்குறைய 114 டெசிபல்கள் இருக்கும்.
இவை பல்வேறு காரணங்களுக்காக கர்ஜிக்கின்றன. முதலாவதாக, தங்கள் பிரதேசத்தைக் காப்பாற்றுவதற்காக. ’இது என் இடம்’ என்று மற்ற சிங்கங்களுக்குத் தெரிவிக்கவும், எதிரிகளைப் பயமுறுத்தி விரட்டவும் கர்ஜனையைப் பயன்படுத்துகின்றன. இரண்டாவதாக, தூரத்தில் இருக்கும் தங்கள் குழு உறுப்பினர்களை அழைப்பதற்காகக் கர்ஜிக்கின்றன. ’நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொல்வது போல இந்த ஒலி அமைகிறது.
What's Your Reaction?