உணவு சுற்றுலா: லக்கம் அருவி காடை முட்டை
குளிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டே, லக்கம் அருவியின் சாரலில் நனைந்துகொண்டே சூடான காடை முட்டைக் கறியைப் பசியுடன் சாப்பிடும்போது, கரைந்து இரைகுழலுக்குள் இறங்குகிறது.

மலைப் பகுதியை ரசித்துக்கொண்டே தேநீர் பருகுவது, கடற்கரையில் அமர்ந்துகொண்டு மீன் உணவு வகைகளைச் சாப்பிடுவது என்பதெல்லாம் சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியல்களில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் அருவிக்கு அருகில் நின்றுகொண்டு, அதன் சாரல் மெலிதாகத் தேகத்தில் விழ, ஆவி பறக்கும் காடை முட்டைக்கறியைச் சாப்பிடுவது சுகமான அனுபவம்! அதற்காக நீங்கள் பயணப்பட வேண்டியது மூணாறுக்கு அருகிலிருக்கும் லக்கம் அருவிக்கு.
உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் இருக்கிறது. மூணாறுக்கும் இதற்கும் சுமார் 25 கி.மீ. தொலைவு.
மலைச்சாலைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது அழகுச் சொட்டும் லக்கம் அருவி! அவ்வழியே பயணப்படுபவர்களின் மனமோ, லக்கம் அருவியின் பேரழகை நின்று ரசிக்காமல் பயணத்தைத் தொடர விரும்பாது. அருவியை மையப்படுத்தி சாலை நெடுகிலும் பல்வேறு சிற்றுண்டி கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அங்கு ஒரு கடையில் கேரளத்து மசாலா போட்டு அவித்த காடை முட்டையை மெருகேற்றிக் கொடுக்கப்படும் ‘காடை முட்டைக்கறி’ எனும் ஊட்டமிக்கச் சிற்றுண்டி ஸ்பெஷல். அதற்கு ஏகப்பட்ட பயணிகள் ரசிகர்களாக இருக்கிறார்கள்!
What's Your Reaction?