ஆந்தையின் அலறல் என்ன சொல்கிறது? | உயிரினங்களின் மொழி - 17
ஆந்தைகளின் கண்கள் இரவில் பார்ப்பதற்கான தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. இது அவற்றின் தொடர்பு முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய முன்னோக்கி அமைந்த கண்கள், குறைந்த வெளிச்சத்தில்கூட சிறிய அசைவுகளைக் கண்டறிய உதவுகின்றன. கண்களைச் சுழற்றுவதன் மூலம், அது எதிர்கொள்ளும் சூழ்நிலையை மற்ற ஆந்தைகளுக்குத் தெரிவிக்கின்றன. விரிந்த கண்கள் அச்சத்தைக் குறிக்கும். பாதி மூடிய கண்கள் அமைதியான, விழிப்புடன் கூடிய நிலையைக் குறிக்கும்.

ஆந்தைகள் பகலில் உறங்கி, இரவில் இரை தேடுகின்றன. இவை ஒலிகளால் மட்டுமன்றி பார்வையாலும் உடல் அசைவுகளாலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இரவின் அமைதியில் திடீரென்று கேட்கும் 'ஹூ-ஹூ' என்கிற ஒலி பலரையும் அச்சத்தில் ஆழ்த்துவது உண்டு. இந்த அலறல் ஆந்தையின் அடிப்படை தொடர்பு முறைகளில் ஒன்று. ஆண் ஆந்தைகள் இந்த ஒலியைத் தங்கள் பிரதேசத்தை அறிவிக்கவும், பெண் ஆந்தைகளைக் கவரவும் பயன்படுத்துகின்றன.
ஒவ்வோர் ஆந்தை இனமும் தனக்கென ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தங்கள் இனத்தை அடையாளம் காணவும், வேறு இனங்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவும் முடிகிறது. சில ஆந்தை இனங்கள் மென்மையான, இனிமையான ஒலிகளை எழுப்பும். சில இனங்கள் கடுமையான, ஊடுருவும் ஒலிகளை எழுப்புகின்றன.
ஆபத்து நேரத்தில் உரத்த, தீவிரமான கூச்சல்களை ஆந்தைகள் எழுப்புகின்றன. இது மற்ற ஆந்தைகளுக்கு உடனடி ஆபத்து குறித்த எச்சரிக்கையாக அமைகிறது.
உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குஞ்சுகளுடன் தொடர்புகொள்ளும் போது சிறிய உயர் அதிர்வெண் ஒலிகளை எழுப்புகின்றன. ஆந்தைகள் தங்கள் அலகுகளை அசைப்பதன் மூலமும் ஒலிகளை உருவாக்குகின்றன. இது பொதுவாக எச்சரிக்கையாகவும், இணையைச் சந்திக்கும் போதும், குஞ்சுகளுக்கு உணவளிக்கும் போதும் பயன்படுத்தப்படுகிறது.
What's Your Reaction?