‘அதர்ஸ்’ திரைப் பார்வை | ஓர் ஆபத்தான ஆட்டம்!
ஓர் அறிமுக இயக்குநர் அல்லது அறிமுக நாயகன் தங்களுடைய முதல் படமாக ஒரு த்ரில்லரை தேர்ந்தெடுப்பது விபரீதமான விளையாட்டு என்பதே என் பார்வை. ஆனால், தேர்ந்தெடுக்கும் கதைக் கருவும் அதை மெல்ல மெல்ல விடுவித்துக் காட்டும் சுவாரசியமான திரைக்கதை அமைப்பில் கோட்டை விடாமலும் இருந்தால் ரசிகர்கள் ஆதரவு நிச்சயம். ‘

புறநகரில் நடக்கும் ஒரு கொள்ளை முயற்சியில் விபத்துக்குள்ளாகும் ஒரு வேன் வாகனத்தில் இருந்த நான்கு பேர் இறந்துவிடுகிறார்கள். ஓட்டுநர் மட்டும் தப்பி ஓடிவிட, இறந்த நால்வரில் 3 பெண்கள் பார்வையற்றவர்கள் என்பதும், அவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு சடலங்களாகத்தான் அந்த வேனில் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்பதும், கொலைகளை விபத்தாக மாற்றும் முயற்சியே அது என்பதை ஆதித்தியா கண்டுபிடிப்பதிலிருந்து தொடங்குகிறது படம். பின்னர் அவரது பியான்சி கௌரி கிஷன் மருத்துவராகப் பணிபுரியும் செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவமனையின் ஆய்வகம் ‘டார்கெட்’ செய்யப்பட்டதால் உருவாகும் சிக்கல், முதலில் நடந்த விபத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறது என்பதை கண்டறிந்து, சதியின் பின்னாலிருக்கும் முகத்தை நாயகன் நெருங்குவதே கதை.
முதலில் இயக்குநர் அபி ஹரிஹரன் தேர்வு செய்துகொண்ட கதைக்கருவைப் பார்ப்போம். ‘மருத்துவத் துறை குற்றங்கள்’ என்பதை மையமாகக் கொண்ட படங்கள் பெரும்பாலும் உறுப்புத் திருட்டையும் போலி மருந்துகளையும் தாண்டி பெரிதாகச் சிந்தித்ததில்லை. இதில், சோதனைக் குழாய் வழியே குழந்தை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்காக, நிராதாரவான பெண்களிடமிருந்து திருடப்படும் கரு முட்டைகள், அவற்றை கையாழும் மருத்துவ ஆய்வங்களின் பாதுகாப்பு அடுக்கில் இருக்கும் பலகீனம் ஆகிவற்றுடன் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருத்துகளை இப்படியும் பயன்படுத்த முடியும் என ஒரே கதைக் களத்துக்குள் இணைந்த விதம் பாராட்டும்படி இருகிறது. ஆனால், இப்படிப்பட்ட மருத்துவக் குற்றங்கள் நடக்க இயக்குநரே எதற்காக வழிகாட்ட வேண்டும் என்ற அதிர்ச்சியும், அதில் சமூக விடுதலை நோக்கி நகர்ந்துவரும் திருநர் சமுகத்தை சினிமேட்டிக் ‘சட்டகம்’ என்கிற சட்டகத்துள் அடைத்ததும் இயக்குநர் மீது கோபம் கொள்ள வைக்கிறது. ஆனால், திரைக்கதை நெடுகிலும் நிறைய திருப்பங்களை அவர் நிறைத்து வைத்திருப்பதாலும் மாற்றுப் பாலினத்தவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முரணான கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் அவர் காட்டியிருக்கும் நேர்மையான அக்காறையாலும் அவரை நாம் மன்னித்துக் கடந்து படத்தின் ஓட்டத்தில் கரைந்துவிடும்படி செய்திருக்கிறார்.
What's Your Reaction?