மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும்: அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை
ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என, தமிழக அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என, தமிழக அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: “தற்போது அமலில் உள்ள மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே நெருக்கடியில் உள்ளன. தவிர மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உள்நாடு மற்றும் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. அமெரிக்க அரசு மாற்றியமைத்துள்ள புதிய வரி விதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தமிழக அரசு இவ்வாண்டு மின்கட்டணத்தை உயர்த்தினால் நிதி நெருக்கடி அதிகமாகும். இதனால் உற்பத்தி குறைந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். பல நிறுவனங்கள் மூடப்படவும் வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?