நிகோலஸ் கோபர்நிகஸ் | விஞ்ஞானிகள் - 28
நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

மருத்துவர், நீதிபதி, வானியலாளர், கணிதவியலாளர், மத போதகர் எனப் பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கினார் நிகோலஸ் கோபர்நிகஸ். போலந்து நாட்டில் 1473, பிப்ரவரி 19இல் பிறந்தார். வசதியான வணிகக் குடும்பம். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.
1491இல் கிராக்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குதான் கோபர்நிகஸுக்கு வானியல் அறிமுகமானது.1494இல் இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அங்குதான் அவர் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் நோவாராவைச் சந்தித்தார். அவர்தான் இத்தாலியின் கணித ஜோதிடர். வருட பலனைக் கணித்துச் சொல்வார். அரண்மனை, இதர முக்கியக் குழுக்களிடம் செல்வாக்குப் பெற்றவர். அவருடன் கோபர்நிகஸ் தங்கினார். நோவாராவை குருவாக ஏற்றுக்கொண்டார் கோபர் நிகஸ். இருவரும் சேர்ந்து இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்தனர்.
What's Your Reaction?