ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை
ஏ.சி. இயந்திரங்களின் இயல்பு வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

புதுடெல்லி: ஏ.சி. இயந்திரங்களின் இயல்பு வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்கண்டீஷனர் (ஏ.சி.) வெப்பநிலையை தரப்படுத்துவது குறித்து, உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆலோசனை முடிந்ததும், அதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்போது, அந்தந்த மாநிலங்களின் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளன.
What's Your Reaction?